Friday, May 17, 2024
Home » ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் முன்னாள் ராணுவ வீரர் கட்டையால் அடித்துக் கொலை

ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் முன்னாள் ராணுவ வீரர் கட்டையால் அடித்துக் கொலை

by Lakshmipathi

*2வது மனைவி, மைத்துனர் கைது

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே குடும்ப தகராறில் முன்னாள் ராணுவ வீரரை கட்டையால் அடித்துக் கொன்ற 2வது மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு ஊராட்சி பூனைக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் யாழரசன்(47), முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் சின்னகம்மியம் பட்டு அருகே உள்ள கலர் வட்டம் பகுதியை சேர்ந்த பிரதீபா(33) என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியா(15), கீர்த்திகா(13) என 2 மகள்கள் உள்ளனர்.

யாழரசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. பிரதீபா வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதனால் பிரதீபா மீது சந்தேகப்பட்டு கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழரசனுக்கும், பிரதீபாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதீபா கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு சின்ன கம்மியம்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீடான கலர் வட்டத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த யாழரசன் தனது மனைவி பிரதீபா வீட்டிற்கு சென்று அழைத்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் யாழரசன் பிரதீபாவை வீட்டில் இருந்த கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீபாவும், இவரது அண்ணன் திருப்பதி(38) ஆகிய இருவரும் யாழரசனை கட்டையால் சரமரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் யாழரசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் கலர் வட்டம் பகுதிக்கு சென்று பிரதீபா, இவரது அண்ணன் திருப்பதி ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் ராணுவ வீரர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது மனைவியை காதலித்து திருமணம்

முன்னாள் ராணுவ வீரர் யாழரசனுக்கு ஏற்கனவே பூனைக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு தற்போது தனுஷ் குமார்(19) என்ற மகன் உள்ளார். அவர் கல்லூரியில் பயின்று வருகிறார். மனைவி இறந்த பிறகு பிரதீபாவை, யாழரசன் காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், காதல் கணவரை இரண்டாவது மனைவி தனது அண்ணனுடன் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

20 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi