ராஞ்சி: ஜார்க்கண்டில் மோசடியாக கல்லூரியை அபகரித்ததாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷிவ் தத் சர்மா என்பவர் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜசிதிஹ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிஎன்பி வங்கி அதிகாரியுடன் கூட்டு சதி செய்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றை வாங்கிய குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் மனைவி, 2 மகன்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கி கடனை செலுத்தாததால் ஏலத்துக்கு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. நிஷிகாந்த் துபே தனது மனைவியை தலைவராக கொண்ட பாபா பைத்யநாத் மருத்துவ அறக்கட்டளை பெயரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை வாங்கியுள்ளார். குறைந்த விலைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாங்கப்பட்டதால் பி.என்.பி. வங்கிக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கோடா எம்.பி. அரசியலில் இருந்து விலகுவேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் JMM ஆட்சி அமைந்த பிறகு இது என் மீதான 44-வது வழக்கு. ஜார்கண்ட் காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகுவேன். DRT நீதிமன்றத்தின் ஏலத்தில் இந்த மருத்துவக் கல்லூரி வாங்கப்பட்டது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். நான் அதன் அறங்காவலர் அல்ல. நான் பிஜேபியின் சிப்பாய் என்று குறிப்பிட்டுள்ளார்.