Tuesday, May 21, 2024
Home » ஜான்வி கபூர் ஃபிட்னெஸ்

ஜான்வி கபூர் ஃபிட்னெஸ்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் தடக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கியவர். இவர் தற்போது தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தனது ஃபிட்னெஸ் ரகசியம் குறித்து ஜான்வி கபூர் பகிர்ந்து கொண்டவை:நான் ஒரு ஃபிட்னெஸ் ஃப்ரீக் என்று சொல்லலாம். கடந்த சில காலங்களாக தினசரி உடற்பயிற்சி செய்வதை தீவிரமாக கையாண்டு வருகிறேன். ஏனென்றால், ஒரு காலத்தில் அதிக உடல் எடையுடன் இருந்தேன்.

எப்போது சினிமாவுக்குள் வந்தேனோ அது முதல் ஃபிட்னெஸின் அவசியத்தை புரிந்து கொண்டேன். தற்போது, நான் கடின பயிற்சிகள் கூட செய்யும் அளவிற்கு தீவிர உடற்பயிற்சி செய்ய விரும்புபவளாக மாறிவிட்டேன். இதற்கு எனது உடற்பயிற்சியாளர் நம்ரதாபுரோஹித்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவருடைய மேற்பார்வையில்தான் இந்த கடின பயிற்சிகளை எல்லாம் என்னால் செய்ய முடிகிறது. என்னைப் பொருத்தவரை, எந்தவொரு உடற்பயிற்சி முறை துவங்குவதற்கு முன்பும் ​​தகுதிவாய்ந்த உடற்பயிற்சி நிபுணரிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெற்று கொண்டு துவங்குவதே நல்லது.

*ஒர்க்கவுட்ஸ்

எனது உடற்பயிற்சியானது கார்டியோ, வலிமை பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றின் கலவையாகும். மேலும், தினசரி நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்றவற்றை உள்ளடக்கிய 45 நிமிட கார்டியோ அமர்வுடன் எனது நாளைத் தொடங்குகிறேன். இது எனது உடலில் சேருகின்ற தேவையற்ற கலோரிகளை எரிக்கவும், இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கார்டியோவுக்குப் பிறகு, வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். இதில் எடை தூக்குதல், குந்துகைகள், நுரையீரல் பயிற்சிகள், புஷ்-அப்கள் மற்றும் பிற உடல் எடை பயிற்சிகள் உள்ளன. இது மெலிந்த தசையை உருவாக்கவும், ஒட்டுமொத்த உடல் வலிமையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இறுதியாக, எனது உடற்பயிற்சியை ஒரு நிதானமான யோகா அமர்வுடன் முடிக்கிறேன். அது நெகிழ்வுத்தன்மையை நீட்டிக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. யோகா எனது உடல் ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் உதவுகிறது, ஏனெனில் அது அமைதி காக்கவும் நிதானமான முடிவுகளில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

*டயட்

உணவு முறை என்று எடுத்துக் கொண்டால், ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முறையையே பின்பற்றுகிறேன். அதில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான
கொழுப்புகள் ஆகியவை அடங்கும். அந்தவகையில், எனது நாளை தினசரி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்த ஜூஸ் எடுத்துக் கொள்வது மூலம் தொடங்குகிறேன். அதைத் தொடர்ந்து காலை உணவாக முட்டை டோஸ்ட் மற்றும் கிரீன் டீ எடுத்துக் கொள்வேன்.

மதிய உணவிற்கு, காய்கறிகள் மற்றும் கைகுத்தல் அரிசியுடன் சிக்கன் ஃப்ரை அல்லது மீன் ஃப்ரை சாப்பிடுவேன். தின்பண்டங்களில் தினசரி ஒரு பழம் என்ற வகையில் ஏதாவது ஒரு ஃப்ரூட் ஸ்மூத்தி, நட்ஸ் மற்றும் விதைகள் அடங்கும். இரவு உணவிற்கு, மதிய உணவை போன்றே ஏதாவது ஒரு சூப், வறுக்கப்பட்ட மீன் அல்லது சிக்கன் கறி மற்றும் சாலட் சாப்பிடுவேன். நாம் என்னதான் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும். ம் எனவே, நாள் முழுவதும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதுபோன்று வெளி உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்துவிட்டு வீட்டில் சமைத்த உணவையே எடுத்துக் கொள்வேன். அதுபோன்று சர்க்கரை சேர்த்த பானங்களைத் தவிர்த்துவிடுவேன். இதுவே எனது டயட் ரொட்டீன்.

*பியூட்டி

சரும பராமரிப்பை பொறுத்தவரை, நான் கெமிக்கல் கலந்த எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதில்லை. சரும பொலிவிற்காக அம்மா சொல்லிகொடுத்திருந்த ஒருசில வழிமுறைகளையே இதுவரை பின்பற்றி வருகிறேன். தினசரி குளிக்க செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் உடல் முழுவதும் தடவி வைத்திருந்து, பின்னர் குளிக்க செல்வது. மேலும், ஒரு சில டிப்ஸ்களை பின்பற்றி வருகிறேன். உதாரணமாக, முகத்தை நன்றாக தண்ணீரால் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து விடவேண்டும்.

அதன் பிறகு ஆவி பிடிக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் தேனை ஊற்றி பிசைந்து வைத்த வாழைப்பழத்தில் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடவேண்டும். இது சருமத்திற்கு ஈரத்தன்மையுடன் போஷாக்கையும் கொடுக்கும்.

பாதியளவு ஆரஞ்சு பழத்தில் விதைகளை நீக்கி முகத்தின் மீது சிறிது நேரம் தேய்க்க வேண்டும். அதன் பிறகு சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இது டெட் ஸ்கின்னை நீக்கிவிடும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். முகத்தில் பொலிவு வந்து விடும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி

You may also like

Leave a Comment

twenty + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi