சிவகாசி: பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம், ரூ.12.58 லட்சத்தை இழந்த ஈரோடு தொழிலதிபர் சிவகாசி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், முடக்கன்குறிச்சி அருகே கோவில்பாளையம் எம்.அனுமன்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (41). பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் மனைவி பேச்சியம்மாள்(30) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேச்சியம்மாள், தான் சிவகாசியில் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், கூட்டுறவு வங்கியில் 380 கிராம் நகைகள் ஏலத்துக்கு வருவதாகவும் ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொண்டு வந்தால், அவருக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
நகைகளின் போட்டோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார். இதனை நம்பிய ரமேஷ் நகைகளை வாங்க சிவகாசிக்கு வந்துள்ளார். சிவகாசி பஸ் ஸ்டாண்டில் ரமேஷை சந்தித்த பேச்சியம்மாள் தொடர்ந்து பல்வேறு வங்கிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் ரொக்கமாக ரூ.1.58 லட்சத்தையும், பல வங்கிகளில் இருக்கும் தனது கணக்குகள் மூலமாக ரூ.11 லட்சத்தையும் பேச்சியம்மாள் பெற்றுக் கொண்டார். ரமேஷ் நகைகளை கேட்டபோது, சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள வங்கி அருகே காத்திருக்கும்படி கூறிய பேச்சியம்மாள், நகைகளுடன் வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ், சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.