மதுரை: ஜெயலலிதாவை இழிவாக பேசிய அண்ணாமலை கட்சியுடன் ஓபிஎஸ் கூட்டணி வைக்கலாமா என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, மதுரை ஒபுளா படித்துறையில் நேற்றிரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘தேர்தலுக்கு மட்டுமே பாஜ மக்களை சந்திக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமை பிரச்னை குறித்து பாஜ தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
யாரை எப்படி பேசுவது என மரியாதை தெரியாதவர் அண்ணாமலை. டீக்கடையில் டீ ஆற்றிய ஓபிஎஸ்சை, ஜெயலலிதா 3 முறை முதல்வராக்கினார். அவரை அண்ணாமலை இழிவாக பேசினார். தற்போது எம்பி பதவிக்காக பாஜவோடு ஓபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார். ஜெயலலிதாவை இழிவாக பேசிய அண்ணாமலை, கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைக்கலாமா?” இவ்வாறு அவர் பேசினார்.