பெரியகுளம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2008ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்கு சென்றார். அப்போது அவருடைய வாகனம் சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்டபோது நேரில் பார்த்த சாட்சிகளாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவ்வழக்கு நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார். அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சாட்சியம் அளித்தார்.