தருமபுரி :வாச்சாத்தி கிராம மக்கள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளிக்கிறார்.