சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை அறியாமையில் குறிப்பிடுவதாக சசிகலா குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை காட்டுவதோடு தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது.
அவர், சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர். பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடியவர் ஜெயலலிதா என்பது நாடறிந்த உண்மை.
சாதி மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட தன்னை அர்ப்பணித்தவர். தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மக்களுக்கு கொடுத்துள்ள திட்டங்கள் பயனளித்து வருகிறது. பெண்ணினத்திற்கான பல திட்டங்களை கொண்டு வந்தவர். அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக வாழ்நாள் முழுவதும் இருந்தவர். அவரது ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இருந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.