Sunday, May 19, 2024
Home » ஜப்பான் நாட்டில் 4வது முறையாக நிலநடுக்கம்… மியாசாஹி நகரில் பூமிக்கு அடியில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் 5.2 ரிக்டரில் பதிவு!!

ஜப்பான் நாட்டில் 4வது முறையாக நிலநடுக்கம்… மியாசாஹி நகரில் பூமிக்கு அடியில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் 5.2 ரிக்டரில் பதிவு!!

by Porselvi

டோக்கியோ : ஜப்பானின் கியுஷூ (Kyushu) வட்டாரத்தின் தென் கடலோரத்தை இன்று (8 ஏப்ரல்) 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. 2024ம் ஆண்டு புத்தாண்டு நாளே ஜப்பான் மக்களுக்கு நிலநடுக்க அதிர்ச்சியுடன் தொடங்கியது. அந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். அப்போதே ஜப்பானில் இன்னும் சில நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3ம் தேதி தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்டதையடுத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலநடுக்கம், சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. வருகிற நாட்களில் அதிக அளவில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில், ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக கடந்த 4-ம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 32 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் கடந்த 6ம் தேதி ஜப்பானின் ஹோன்ஷு நகரில் 3-வது முறையாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியது.

இந்நிலையில்,ஜப்பானில் 4வது முறையாக மியாசாஹி என்ற இடத்தில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக 8 World செய்தி குறிப்பிட்டது. ஜப்பான் நேரப்படி காலை சுமார் 10.25 மணியளவில் நிலநடுக்கம் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருள் சேதங்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

12 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi