புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வரும் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றி வந்தபோது புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. இதுதொடர்பாஜ பிரதமர் மோடி மீதும், ஒன்றிய பாஜ அரசும், அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதேபோல், 2022ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு ஹைட்ரோ மின்சார திட்டம் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்திலும் ஊழல் நடந்ததாகவும் அதனை மறைக்க தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் வழங்க முன்வந்தார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ மருத்துவ காப்பீடு முறைகேடு குறித்து விளக்கம் அளிக்க சத்யபால் மாலிக்கிற்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதற்காக அவர் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இந்தநிலையில் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ நேற்று காலை டெல்லியில் உள்ள சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. மோடி மீதும் ஒன்றிய அரசு மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வரும் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ சோதனை நடத்துவது பெரும் பரப்பரை ஏற்படுத்தி உள்ளது.