உதம்பூர்: “ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும். ஜம்முவில் பேரவை தேர்தல் நடத்தப்படும்” என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு ஆதரவாக பிரதமர் மோடி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “2014ம் ஆண்டு இங்கு வந்த போது, பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து இந்த மக்களை விடுவிப்பேன் என்று கூறினேன்.
மக்களுடைய ஆசீர்வாதத்தால் அது நிறைவேறி உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு, அரசியலமைப்பு உரிமை பெற்ற பல்வேறு சமூகத்தினருக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும். விரைவில் பேரவை தேர்தல் நடத்தப்படும். உங்கள் பிரச்னைகளை பேரவை உறுப்பினர்களிடம் நீங்கள் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பாஜ அரசியல் சாசனத்தை அழிக்க முயல்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நான் அவர்களுக்கு சொல்கிறேன். அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனம்தான் பாஜவுக்கு எல்லாமே. பாஜ அதை மதிக்கிறது. நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்த அரசியல் சாசனத்தை அழிக்க நினைத்த காங்கிரஸ், தற்போது அரசியல் சாசனம் என்ற பெயரில் என் மீது பழி சொல்கிறது” என்று குற்றம்சாட்டினார்.