புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் முறையாக 2019 டிசம்பரில் நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கை மாற்றுமாறு மனுதாரர்கள் முறையிட்டனர்.
ஆனால் 2020 மார்ச்சில் வழங்கப்பட்ட உத்தரவில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே வழக்கு நடைபெறும் என என்.வி ரமணா அறிவித்தார். அதன் பிறகு என்.வி ரமணா, யு.யு லலித் ஆகியோர் அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக பதவியேற்று ஓய்வும் பெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிட படாமலேயே இருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மேற்கண்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜம்மு – காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் திங்கள், வெள்ளி கிழமைகளை தவிர்த்து தினசரி விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.