ஆக்ரா: பாஜக எம்.பி ராம் சங்கர் கத்தேரியாவுக்கு ஆக்ரா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தால், அவரது எம்பி பதவி தகுதியிழப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மின்சாரம் வழங்கும் நிறுவன ஊழியரை தாக்கியதாக முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சரும், உத்தரபிரதேச எம்பியுமான ராம் சங்கர் கத்தேரியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நேற்று அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆக்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, எட்டாவா மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதியிழப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ் அவர் உடனடியாக தகுதியிழப்பு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதியிழப்பு செய்யப்பட்டது பரபரப்பை உருவாக்கியது.