திருமலை: ஆந்திர மாநில கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் சிதரி அப்பலராஜு நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பே நமது ஆட்சியாளர்கள் விசாகப்பட்டினத்தை தலைநகராக மாற்ற நினைத்தார்கள். ஆனால் அதனை செயல்படுத்தவில்லை.
ஆனால் தற்போது முதல்வர் ஜெகன்மோகன் தனது பாத யாத்திரையில் வட ஆந்திரா பின்தங்கியிருப்பதை குறிப்பிட்டு நிர்வாகம் பரவலாக்கப்படாமல் இந்த பகுதி வளர்ச்சியடையாது என கண்டறிந்து இந்த விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக கொண்டு வந்துள்ளார். விசாகப்பட்டினம் தலைநகராக செயல்படுவதன் மூலம் வட ஆந்திரா வளர்ச்சி பெறுவதுடன் மாநிலம் முழுவதும் நிர்வாகம் பரவலாக்கத்தின் மூலம் அனைத்து இடங்களுக்கு சம உரிமை வளர்ச்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.