திருமலை: கட்சியில் சேர்ந்து ஒரு வாரமே ஆன நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து அம்பதி ராயுடு விலகினார். இதுகுறித்துஅவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் கடந்த வாரம் முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஒய்எஸ்ஆர் கட்சியில் இருந்து விலகுவதாகவும், சிறிது காலம் அரசியலை விட்டு விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே அவர் விலகிவிடுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பலர் அதிருப்தியில் வெளியேறி தெலுங்கு தேச கட்சியில் 3 எம்எல்ஏக்களும், ஜனசேனா கட்சியில் ஒரு எம்எல்சியும் சேர்ந்துள்ளனர்.
மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அதில் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தி காரணமாக மேலும் பலர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.