Wednesday, May 15, 2024
Home » ஜேடர்பாளையத்தில் மீண்டும் பதற்றம் வாழைகளை வெட்டி சாய்த்து டிராக்டருக்கு தீ வைத்த கும்பல்: டிஐஜி ஆய்வு

ஜேடர்பாளையத்தில் மீண்டும் பதற்றம் வாழைகளை வெட்டி சாய்த்து டிராக்டருக்கு தீ வைத்த கும்பல்: டிஐஜி ஆய்வு

by MuthuKumar

பரமத்திவேலூர்: ஜேடர்பாளையத்தில் மர்ம கும்பல் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டருக்கு தீ வைத்தும், 50க்கும் மேற்பட்ட வாழை மற்றும் மரவள்ளி செடிகளை வெட்டி சாய்த்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே, கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சிறுவன் ஒருவனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருதரப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஆலைக் கொட்டகைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள், வாழை, பாக்கு மரங்களை வெட்டி சாய்ப்பது போன்ற பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வந்தது.

இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியது. 600க்கும் மேற்பட்ட போலீசார், அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஜேடர்பாளையத்தை அடுத்துள்ள பல்லக்காபாளையம் அருகே, ஜேடர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும், அருகில் உள்ள வீரமணி மற்றும் ராமசாமி ஆகியோரது வயலில் 30க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் மரவள்ளி செடிகளை வெட்டி சாய்த்துள்ளனர். இதனால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணா, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

You may also like

Leave a Comment

3 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi