சென்னை: தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் உள்ள துணிக்கடைக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் பிரபல துணிக் கடை நிறுவனம் 58க்கும் மேற்பட்ட கடைகளை தொடங்கி நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 4 பெயர்களில் 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காஞ்சிபுரத்திலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் இறங்கினர். சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. இன்றும் சோதனை தொடரும் என்று கூறப்படுகிறது. சோதனைக்குப் பிறகுதான் எவ்வளவு வரி முறைகேடுகள் நடந்தது என்று தெரியவரும். அதேநேரத்தில், இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சோதனையையொட்டி கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. வாடிக்கையாளர்திருப்பி அனுப்பப்பட்டனர். கடைகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.