சென்னை: அதிமுக., பொதுக்குழு கூட்டம், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. அப்போது, அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணங்கள், வாகன ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக காவல்துறையிடம் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தார். இந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தரப்பில் சி.வி.சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு நேற்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதரார் சார்பாக மூத்த வக்கீல்கள் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் உத்தரவை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சைதாப்பேட்டை நீதிமன்றம் எங்கள் தரப்பிற்கு ஆவணங்கள் மற்றும் பொருட்களை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டனர்.
ஆவணங்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ். அணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கில் விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக தெரிவித்தார்.