ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா தகுதி பெற்றார்.3வது சுற்றில் ஆஸ்திரியாவின் ஜூலியா கிரேபருடன் (26 வயது, 89வது ரேங்க்) நேற்று மோதிய கசட்கினா (26 வயது, 9வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜூலியா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்து கடுமையாகப் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.
அதில் அதிரடியாக விளையாடி ஜூலியாவை திணறடித்த கசட்கினா 7-5, 4-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 3 மணி, 19 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் கிரீஸ் நட்சத்திரம் மரியா சாக்கரி (27 வயது, 8வது ரேங்க்) 5-7, 3-6 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவாவிடம் (23 வயது, 70வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.