வெலிங்டன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை அபாரமாக வென்றது. வெலிங்டனில் நேற்று நடந்த இப்போட்டியில், இரு அணிகளுமே 2வது வெற்றியை பதிவு செய்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் களமிறங்கின. தொடக்கத்தில் இத்தாலி வீராங்கனைகள் துடிப்புடன் விளையாடி தாக்குதல் நடத்தினாலும், அதை எளிதாக முறியடித்த ஸ்வீடன் அணியினர் பதில் தாக்குதல் நடத்தி கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இதன் பலனாக 39வது நிமிடத்தில் அமண்டா இலெஸ்டட், 44வது நிமிடத்தில் ஃபிரிடோலினா ரால்ஃபோ, 45+1வது நிமிடத்தில் ஸ்டினா பிளாக்ஸ்டெனிஸ் ஆகியோர் கோலடிக்க இடைவேளையின்போது ஸ்வீடன் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த ஸ்வீடன் அணிக்கு 50வது நிமிடத்தில் அமண்டா இலெஸ்டட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். 90+5வது நிமிடத்தில் ரெபக்கா பிளோக்விஸ்ட் ஒரு கோல் அடிக்க, ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று நாக் அவுட் வாய்ப்பை உறுதி செய்தது. எப் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது.