Monday, June 10, 2024
Home » உங்க குழந்தை பொய் சொல்கிறதா?

உங்க குழந்தை பொய் சொல்கிறதா?

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில்தான் குழந்தைகளின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அதற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும்கூட காலப்போக்கில் அதனை அவர்களாகவே, தங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது சூழ்நிலையால் அதனை கற்றுக் கொள்வார்கள். பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும். அப்படி பொய் சொல்கிறார்கள் என ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால், இந்த தீய பழக்கத்தை சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது.

குழந்தைகள் வளர்க்க மற்ற விஷயங்களில் தேவைப்படும் பொறுமை இதற்கும் தேவைப்படும். உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும். ஆனால் இது ஒன்றே இதனை தீர்ப்பதற்கான வழியல்ல. சில தாய்மார்களுக்கு சரியாக இருக்கும் இந்த முறை சிலருக்கு சரியாக அமைவதில்லை. குழந்தைகள் சந்திக்கும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் பல பல. அதனால் இதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருப்பதில்லை.

அதனை புரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும். பொய் சொல்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள, இதோ உங்களுக்காக சில வழிகள். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.

கண் தொடர்பு

உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். இது அவர்கள் பொய் பேச தொடங்கும் ஆரம்ப நிலையாகும். ஆனால் அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதன் பின் எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள். ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டு பிடித்து விட்டால் இதனை தவிர்த்து விடலாம். பொய் சொல்வது தவறு என்பதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அதே போல் அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சொன்னதையே சொல்லுதல் மற்றும் முகத்தை தொடுதல்

உடல் மொழியை வைத்தும் கூட பொய் சொல்லுபவர்களை கண்டு கொள்ளலாம். சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அரித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் ஆகியவைகளும் கூட அவர்கள் பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

முரண்பாடுகள்

அவர்கள் கூறும் கதைகளில் முரண்பாடுகள் இருந்து, சொன்னதையே திரும்பி திரும்பி சொல்வதை போன்ற உணர்வை நீங்கள் அடைந்தால், கண்டிப்பாக அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உண்மையை ஒத்துக் கொள்ள உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் திடமாக இருந்து, இந்த தீய பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க முயற்சிக்க வேண்டும்.

தற்காப்பு எதிர்வினைகள்

குழந்தைகள் பொய் சொல்லும் போது அதனை நீங்கள் நம்பவில்லை என்பதை அவர்கள் அறிந்தால், இதனை நீங்கள் சாதாரணமாக கவனிக்கலாம். பெற்றோர்கள் எது செய்தாலும் தவறு என எதற்கெடுத்தாலும் சண்டை போடும் விடலை வயதுடையவர்களிடம் இதனை பொதுவாக காணலாம். அன்பும் பாசமும் எப்போதுமே அவர்களை நம் வசமாக்கி விடும். காலப்போக்கில் அவர்களிடம் மாற்றத்தையும் காணலாம்.

வழக்கத்திற்கு மாறான சைகைகள்

உங்கள் குழந்தை பயன்படுத்தாத சைகைகளை திடீரென பயன்படுத்தினால் உங்களிடம் பொய் கூறுகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உடல் நிலையும் இதனை குறிக்கும். பள்ளிக்கு செல்லும் பிஞ்சு குழந்தைகள் பொய் சொல்லினால் ஒன்று திருதிருவென முழிப்பார்கள் அல்லது குறும்பு சிரிப்பு சிரிப்பார்கள். இதை வைத்து அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை கண்டு பிடித்து விடலாம்.

பதற்றம் மற்றும் குழப்பம்

பொய் சொல்லும் போது குழந்தைகளிடம் காணப்படும் மற்றொரு குணமிது. ஏதாவது கதை கூறும் போது அவர்கள் பதற்றத்துடன் அல்லது நெளிந்து கொண்டே கூறினால், உங்களிடம் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அதே போல் உங்கள் குழந்தை அதிகமாக பேசாமல் கமுக்கமாக இருந்தாலும் ஏதோ பொய் சொல்வதற்கான அறிகுறியே.

பொய் எனும் சமாளிஃபிகேஷன்

உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் சொல்லும் சின்ன சின்ன பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பு வளர்ச்சி, சமுதாயத்தைப் புரிந்துகொள்ளும் முறை, அறிவு மற்றும் உணர்ச்சி ஆகியவை மேம்பட்டு உள்ளது. அதாவது, ஒரு குழந்தை வளர வளர அது இந்த உலகில் வாழ்வதற்கான தகவமைக்கும் திறனும் மேம்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் குழந்தைகள் பொய் சொல்வது.

சின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ளன. தவறு செய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். சிறிய தவறாகவே இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டால் அவர்கள் தவறானவர்கள் எனத் தாங்களே ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi