வாஷிங்டன்: ஈராக், சிரியா நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறி வைத்து அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியா எல்லையையொட்டி ஜோர்டான் நாட்டிலுள்ள அமெரிக்க படைதளம் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் செயல்படும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவே காரணம் என குற்றம்சாட்டிய அமெரிக்கா இதற்கு உரிய பதிலடி தருவோம் என எச்சரித்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ஈராக், சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவை குறி வைத்து அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியாவில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையினரின் இலக்குகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ஈராக், சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர் குழுவின் கட்டுப்பாட்டு மையங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ஆயுத சேமிப்பு கிடங்குகள் உள்பட 85 இலக்குகள் மீது அமெரிக்கா 125 முறை தாக்குதல்களை நடத்தியது.