தெஹ்ரான்: மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பின்னணியில் சதி செயல்கள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு ராணுவ தடயவியல் நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து திங்கள் கிழமை முதல் ஆய்வு செய்து வந்தனர். ஈரான் ராணுவ தடயவியல் மற்றும் விசாரணை அமைப்பினர் தங்களது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் திட்டமிடப்பட்ட வழித்தடத்திலேயே பயணித்ததாகவும், பாதையில் இருந்து விலகவில்லை என்றும் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானி மற்ற ஹெலிகாப்டர்களை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்களோ, குண்டுகளோ தாக்கியதற்கான தடயங்கள் ஹெலிகாப்டரில் இல்லை என்று கூறியுள்ள நிபுணர்கள் மூடுபனி காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதிய பின்னரே ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
கட்டுப்பட்டு அறை மற்றும் விமான குழுவினருக்கு இடையே நடைபெற்ற உரையாடல்களில் சந்தேகத்திற்கு இடமான ஏதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விபத்துகள் பற்றி ஆய்வுகளின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.