புனே: மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி, தியோக்கடேநகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கடந்த ஏப்ரல் 21ம் தேதி திருப்பதிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அங்கு சென்ற திருட்டு கும்பல் அவர்களை மிரட்டி வீட்டில் இருந்த ரூ.95.30 லட்சம் ரொக்கம், ரூ.11 லட்சம் மதிப்பு 200 கிராம் தங்க நகைகள் மற்றும் மூன்று செல்போன்களை அள்ளிச் சென்றது. பின்னர் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் சச்சின் ஜக்தானே (30), ரவீந்திர போசலே (27) என்ற இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.60.97 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.76.32 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பாராமதியைச் சேர்ந்த ரேபா சவான் (32), சதாராவைச் சேர்ந்த நிதின் மோரே (36), துரியோதன் ஜாதவ் (35) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் பாராமதி எம்ஐடிசியில் ஒன்றாக பணிபுரிபவர்கள் ஆவர்.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் சதாராவைச் சேர்ந்த ராமச்சந்திர சவான் (43) என்ற ஜோசியர் எனத் தெரியவந்தது.
அவர்தான் இத்திருட்டு செயலுக்கு நாள் பார்த்து குறித்து கொடுத்துள்ளார். அதன்படி ஏப்ரல் 21ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரம் இருப்பதாகவும், அந்த சமயத்தில் சென்றால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடலாம் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி திருட்டு சம்பவம் நல்லபடியாக முடிந்ததால் அவருக்கு ரூ.8 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர். தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.