சென்னை: முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக பல நூறு கோடி மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டோர் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு முதல் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளனர். தற்போது ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ நிதி நிறுவனத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தேவநாதன் யாதவ் உள்ளார்.
தேவநாதன் யாதவ் தற்ேபாது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியில் படுதோல்வி அடைந்தார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் எந்த வித நிதியும் அளிக்காமல், பணம் இல்லை என்று கூறி வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தின் முன்பு தங்களது முதலீட்டு பணத்தை முழுமையாக தவர வேண்டும் என்று 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் முதலீட்டு பணத்தை உடனே தர வேண்டும் என்று கூறி நிதி நிறுவனத்தின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.