Wednesday, May 22, 2024
Home » தமிழ்நாடு முழுவதும் 10,281 தொடக்கப்பள்ளிகளில் இணையதள வசதி: கணினி வழியில் கற்க ஏற்பாடு

தமிழ்நாடு முழுவதும் 10,281 தொடக்கப்பள்ளிகளில் இணையதள வசதி: கணினி வழியில் கற்க ஏற்பாடு

by Ranjith

சென்னை: தமிழ்நாட்டில் 10,281 தொடக்கப் பள்ளிகளில் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது அந்த பள்ளிகளில் மாணவர்கள் கணினி வழியில் கற்க முடியும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கு ஏப்ரல் 26ம் தேதியுடன் பணி நாட்கள் முடிந்து 27ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டுக்காக, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும் போது, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் வசதிக்காக இணைய வசதியுடன் கூடிய கணினி வழிக்கல்வி கற்க ஏற்பாடு செய்யவும், அதற்காக மாதம் ரூ.1500 செலவிடவும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் கணினி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் 27 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கப் பள்ளிகளிலும், 7,904 நடுநிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இணைய தள வசதி வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் 8 ஆயிரம் பள்ளிகளில் இணைய தள வசதி பெற்றுள்ள நிலையில், சில பள்ளிகள் இன்னும் அந்த வசதிகளை பெறவில்லை என்பதால் மே மாதத்துக்குள் அந்த பள்ளிகளில் இணைய தள வசதிகளை பெற பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது 2,911 பள்ளிகளில் இணைய தள இணைப்பு வழங்கப்பட்டு மொத்தம் 10 ஆயிரத்து 281 பள்ளிகளில் இணைய தள இணைப்பு பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மே மாதத்துக்குள் விடுபட்ட பள்ளிகளில் இணைய தள வசதிகளை பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மற்ற பள்ளிகளுக்கும் விரைவில் இணைய தள இணைப்பு பெறப்பட்டு, வருகின்ற கல்வியாண்டில் 27 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதியுடன் கூடிய கற்றல் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி தற்போது சென்னை கல்வி மாவட்டத்தில் 75 பள்ளிகளிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 99 பள்ளிகளிலும், திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 162 பள்ளிகளிலும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 261 பள்ளிகளிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 65 பள்ளிகளிலும் இணைய தள இணைப்பு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

1 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi