சென்னை சென்னை- மதுரை விமானத்தில், பெண் பயணிகளுக்கு, அன்னையர் தின கவிதை பாடி வாழ்த்தினார் விமானி.அவரை விமானத்தில் பயணம் செய்தவர்கள் பாராட்டினர். சென்னையில் இருந்து மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 11:15 மணிக்கு புறப்பட்டது. இதில் 76 பயணிகள் இருந்தனர். இந்த விமானத்தை, தலைமை விமானி கேப்டன் ராம்வீர், மற்றும் துணை விமான கேப்டன் பிரியவிக்னேஷ் ஆகியோர் இயக்கினர். நேற்று உலக அன்னையர் தினம் என்பதால், விமானம் புறப்படுவதற்கு முன், கேப்டன் பிரியவிக்னேஷ், விமானத்தில் பயணித்த அனைவருக்கும் தமிழில் அன்னையர் தின வாழ்த்தை, கவிதை வடிவில் பாடினார். அந்த கவிதை தமிழில், சினிமாக்களில் வரும் அன்னையரின் கதாபாத்திரங்களை தொடர்புபடுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவரது வாழ்த்து கவிதையை கேட்ட, பயணிகள் அனைவரும் கைகள் தட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதே விமானத்தில் விமானி விக்னேஷின் மனைவி நிவேதிதாவும், பயணியாக அமர்ந்து கவிதையை ரசித்து பாராட்டினார்.