Thursday, May 30, 2024
Home » சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் 400 நாட்களுக்கு மேல் மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் 400 நாட்களுக்கு மேல் மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!!

by Lavanya

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை 400 நாட்களுக்கு மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. இதே நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களின் விலை மட்டும் ஏன் குறைக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் விலையை எரிபொருள் விலை நிர்ணயத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்தியாவில் சுங்கவரியே எரிபொருள் விலை நிர்ணயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. சமீப ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் ஒன்றிய அரசு வரியை உயர்த்தியது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 86 டாலராக இருந்த போது சுங்கவரி ரூ.9ஆக இருந்தது.

2016ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 28 டாலராக இருந்த போது வரி ரூ.19 ஆக இருந்தது. கொரோனா ஊரடங்கின்போது கச்சா எண்ணெய் விலை ரூ.19 டாலராக இருந்த போது வரி ரூ.23 ஒன்றிய அரசு உயர்த்தியது. பிறகு ஒரே மாதத்தில் ரூ.33 ஆக உயர்த்தப்பட்டது. 2022ல் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் என்ற உச்ச விலையை எட்டியபோது வரியை ரூ.19 ஆக ஒன்றிய அரசு குறைத்தது. வரி குறைக்கப்பட்ட போதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. ஒன்றிய அரசின் வரி விதிப்பு ஒரு புரம் இருக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் மொத்த விலையை அதிகரிப்பதும் சில்லறையில் விலை குறையாமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. உதாரணமாக 2021 செப்டெம்பர் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 73 டாலராகவும் ஒன்றிய அரசின் வரி ரூ.32 இருந்தது.

விநியோகிஸ்தர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.41 எண்ணெய் நிறுவனங்கள் வழங்கின. 80 டாலராக கச்சாஎண்ணெய் இருந்த போது ஒன்றிய அரசின் வரி ரூ.27 குறைக்கப்பட்டது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை மொத்த விலையில் ரூ.48 ஏற்றின ஒரு பீப்பாய் 100 டாலர் என்று உச்சத்தை எட்டிய உடன் சுங்கவரி குறைக்கப்பட்ட போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.57 எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. எனவே எரிபொருள் விலையை ஒன்றிய அரசே நிர்ணயித்தால் மட்டுமே சர்வதேச சந்தையில் விலை குறையும் போது அதனால் பொதுமக்கள் பயனடைய முடியுமென்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

12 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi