சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற ஆணை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த ஜனவரி 12ம் தேதி வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த 3 மாதங்களில் அந்த ஆணையம் ஆக்கப்பூர்வமான வழிகளில் எதையும் செய்யவில்லை. எனவே, அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக மே 31ம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றி வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்க முதல்வர் முன்வர வேண்டும்.