திருவாடானை: இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வருங்கால் மாப்பிள்ளைக்கு அனுப்பி மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (20). இவர், 19 வயதான இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதால், அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி சந்துரு வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் தனுஷ் (20), சக்தி (20) ஆகிய 3 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதை அந்த பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. நிச்சயமும் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எடுத்த ஆபாச வீடியோவை நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அந்த திருமணம் நின்று போனது. மேலும் மீண்டும் உல்லாசத்திற்கு வரவேண்டும் எனவும், பணம் கேட்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சந்துரு, தனுஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான சக்தியை தேடி வருகின்றனர்.