ராஞ்சி: கடந்த வாரம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் விசாரணை நடத்த அவருக்கு அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. ஏழு முறையும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை 8வது முறையாகவும் சம்மன் அனுப்பியது. அப்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது. என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்த முடியும் என்றால், அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு பதில் தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை கடந்த வாரம் அவரது வீட்டிற்குச் சென்று நேரில் விசாரணை நடத்தியது. பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வருகிற 27ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, வழக்கு தொடர்பாகன கேள்விளுக்கு பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த முறை விசாரணை நடைபெற்ற பின்னர் ஹேமந்த் சோரன் கூறுகையில், ‘எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது’ என்று கூறினார்.