உணவே மருந்து, அதுவே ஆரோக்கியம் என்றுதான் நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இயற்கையாக விளையும் காய் கறிகளை பச்சையாக சாப்பிட்டுத்தான் ஆதிமனிதர்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள் . தீயின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டதாலும், கூடுதல் சுவையை உணர்ந்து கொண்டதாலும் காய்கறி, தானியம், இறைச்சி உள்ளிட்டவற்றை தீயினில் வாட்டி சாப்பிட்டிருக்கிறார்கள். நாகரிகம் வளர வளர ஆவியில் வேகவைத்து உண்ணும் பழக்கத்திற்கு
மாறியிருக்கிறார்கள். சமையல் முறை இப்போது பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. பரிணாம வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் உணவில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும், அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவு என்றால் அது ஆவியில் வேகவைத்த உணவுதான். இந்த உணவினை அனைத்துக் காலங்களிலும், அனைத்துத் தரப்பினரும் எடுத்துக்கொள்ளலாம் என்று நம்மிடம் பேசத்துவங்கினார் ராஜலட்சுமி.
திருவான்மியூர் திருவள்ளுவர் நகர், ஆர்டிஓ பீச்சில் சாய்கொழுக்கட்டை என்ற பெயரில் உணவகம் நடத்திவரும் ராஜலட்சுமியைச் சந்தித்தபோது மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.‘‘விழுப்புரம்தான் எனக்கு சொந்த ஊரு. எங்க வீட்டில நாங்க மொத்தம் மூன்று பொண்ணுங்க. எங்களுடைய சிறிய வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மாதான் கட்டிட வேலைக்கு சென்று எங்கள் 3 பேரையும் படிக்க வைத்தார். சென்னைக்கு பிழைப்பு தேடித்தான் வந்தோம். எல்லோரையும் வாழ வைக்கும் சென்னை எங்களை மட்டும் கைவிட்டுவிடுமா என்ன.அம்மா கட்டிட வேலை உள்ளிட்ட சில வேலைகளைச் செய்து எங்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இதற்கிடையில் சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் நான் பணிபுரிந்துவந்தேன்.
அங்கு சாப்பிட வருபவர்களுக்குஉணவு பரிமாறுவதுதான் என்னுடைய வேலை. அப்போதுதான் அந்த உணவகத்தில் கொழுக்கைட்டை தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன். இது ஒருபுறம் இருக்க டைப்ரைட்டிங் கற்றுக்கொண்டேன். இதன் மூலம் சிறிது காலம் ஒரு பிபிஒ கம்பெனியில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்தேன். இதற்கிடையில் 2017ம் ஆண்டு சாய் கொழுக்கட்டை உணவகத்தை தொடங்கினேன். சிறிய வண்டியில் வைத்துதான் அனைத்து உணவினையும் தயார் செய்வோம். எனக்கு மகன் பிறந்த 6 மாதம் வீட்டிலேயே இருந்துவந்த நான். பின்னர் ஒரு மாதம் வேலைக்கு சென்றேன். ஆனால் மகனை கவனிக்க வேண்டியிருந்ததால் பணியை விட்டேன். முழு நேரமாக உணவகத் தொழிலில் இறங்கினேன். முதலில் கொழுக்கட்டை மட்டும் கொடுத்து வந்த நான் மினி இட்லி, பொடி இட்லி, காரக் கொழுக்கட்டை, சாம்பார் இட்லி என்று உணவகத்தை விரிவுபடுத்தினேன்.
வண்டியில் வைத்து நடத்திவந்த உணவகத்தை கடையாக மாற்றினேன்.
அப்போது வந்த வாடிக்கையாளர்கள் இங்கேயும் தொடர் வாடிக்கையாளர்களாக வர தொடங்கினர். வாடிக்கையாளர்கள் அதிகம் ஆக ஆக நாங்களும் மெனுவை அதிகரித்துகொண்டே சென்றோம். நிறைய பேர் தோசை வேண்டும் என்று கேட்டதால் அதனையும் வாடிக்கையாளர்களுக்கு தயார் செய்து கொடுக்க தொடங்கினோம். இது பீச் என்பதால் நிறைய பேர் உடற்பயிற்சி செய்வதற்கு வருவார்கள். அவர்கள் சிறு தானியவகை உணவுகள் உள்ளதா என்று கேட்பார்கள். அவர்களுக்கு என்றே சாமை தோசை, வரகு தோசை, கம்பு தோசை, ராகி தோசை, குதிரைவாலி தோசை, தினை தோசையும் கொடுக்கத் தொடங்கினோம். இது போக சீஸ் ஆனியன் பொடி தோசை, சீஸ் கார்லிக் பொடி தோசை, பட்டர் கொள்ளு தோசை, பொடி ஊத்தப்பம், பட்டர் கார்லிக் தோசை, மிளகு தோசை, மணத்தக்காளி தோசை என்று கிட்டத்தட்ட 150 வெரைட்டி டிஸ்கள் எங்கள் உணவகத்தில் உள்ளது. இதில் பனியாரம், இட்லிக்கு கொடுக்கும் பொடியிலும் கொள்ளுப்பொடி, கறிவேப்பிலைப் பொடி, பூண்டுப் பொடி என்று விதவிதமாக கொடுக்கிறேன்.
குடும்பமாக வருபவர்களை போல, பேச்சுலர்ஸ்ஸும் எங்களது உணவகத்திற்கு தொடர்ந்து வந்து சாப்பிட்டு செல்வார்கள். அப்படி வந்து சாப்பிடும் பலரில் வெள்ளை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிடுவது போல் தொக்கு இருந்தால் கேட்பார்கள் அவர்களுக்கென்றே தற்போது அதையும் நாங்கள் தயார் செய்து கொடுத்து வருகிறோம். இதிலும், கொத்தமல்லி தொக்கு, கருவேப்பிலை தொக்கு, பிரண்டை தொக்கு வெரைட்டியில் தருகிறோம். புதியதாக கேண்டில் லைட் தோசை என்று ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த தோசை குழந்தைகளை மட்டுமில்லாமல் டீனேஜ் வயது உடையவர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பிறந்தநாள் கொண்டாடுவது போல் நினைத்து இந்த தோசையில் இருக்கும் கேண்டிலை ஊதி தோசையை மற்றவர்களுக்கு ஊட்டி விட்டு சாப்பிடுவார்கள்.
தற்போது பணியாரம், இட்லி, வெரைட்டி தோசைகள், தொக்கு வகைகளை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நேரடியாக டெலிவரியும் செய்து வருகிறோம். எங்க உணவகத்திற்கு வருபவர்கள் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவதில் ஒன்று விழுப்புரம் ஸ்டைலில் நாங்கள் தயார் செய்யும் சிறுபருப்பு சாம்பாரும்தான். இதற்காக நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதனை சாப்பிட்டு பிடித்தவர்கள்தான் என்னிடம் தொக்குச் செய்து தர சொல்லி கேட்டவர்கள். இப்படி ஒவ்வொரு டிஸ்ஸையும் வாடிக்கையாளர்களின் விரும்பத்திற்கேற்ப தயார் செய்து கொடுத்து வருகிறேன் தொடர்ந்து பெசண்ட் நகரில் ஒரு உணவகத்தை தொடங்கு வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளேன் என்கிறார் ராஜலட்சுமி.
– சுரேந்திரன் ராமமூர்த்தி
சாமை கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
சாமை அரிசி 2கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கல் உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி 1 பெரிய துண்டு துருவியது
தண்ணீர் – நான்கு கப்
தேங்காய் எண்ணெய் – இரண்டு
டேபிள் ஸ்பூன்.
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாமை அரிசியை நன்கு அலசி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் கால் கப் பயத்தம் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம். அதை அரை மணி நேரம் ஊற வைத்துதண்ணீர் கொதிக்கும்போது சேர்த்து கிளறவும். இப்பொழுது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலைப் பருப்பு சேர்த்து சீரகமும் சேர்த்து வறுத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும். இப்பொழுது நான்கு கப் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் ஊறவைத்த சாமை அரிசியை சேர்த்து 10 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும். அது நன்கு வெந்து இருக்கும்.இப்பொழுது இட்லிப் பானையில் வேகவைக்கும் தட்டில் பிடி கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சாமை அரிசி பிடி
கொழுக்கட்டை தயார்.