வாஷிங்டன்: இந்திய அமெரிக்க நட்புறவு ,உலகிலேயே மிகவும் நன்மை அளிக்கும் உறவாக உள்ளது என்றும்,இரு நாடுகளின் உறவு பலமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனுடன் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்திலும் மோடி உரையாற்றினார். மோடியின் இந்த சுற்றுபயணத்தின்போது, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9 பி என்ற சீ கார்டியன் டிரோன்கள் வாங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. குஜராத்தில் ரூ.22 ஆயிரத்து 540 கோடியில் செமி கண்டக்டர் ஆலையை மைக்ரான் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்நிலையில், அதிபர் பைடன் டிவிட்டரில் பதிவிடுகையில், அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவு உலகிலேயே மிகவும் நன்மை அளிக்கும் உறவாக உள்ளது. இந்த உறவு தற்போது இதுவரை இல்லாத அளவில் நெருக்கமானதாகவும்,வலுவானதாகவும் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்து மோடி பதிவிடுகையில், அதிபர் பைடன் கூறியதை நான் முழுமையாக ஏற்கிறேன். இரு நாடுகளின் உறவு உலகத்துக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.