சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட பணிக்காக அடையாறு இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையாறு இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளை கருத்தில் கொண்டு இந்திரா நகரில், பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
ஓஎம்ஆர் நோக்கி செல்லும் வாகனங்கள்: எம்ஜி சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2வது அவென்யூ வழியாக ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூ, 3வது பிரதான சாலை, 21வது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3வது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவிலிருந்து ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும் கேபிஎன்னில் இருந்து ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லும்.
எல்பி ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் : ஓஎம்ஆரிலிருந்து 2வது அவென்யூ வழியாக எல்பி சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு மாறாக அந்த வாகனங்கள் 2வது அவென்யூ, 3வது பிரதான சாலை, இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3வது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4வது அவென்யூ, 3வது பிரதான சாலை, இந்திரா நகர் 2வது அவென்யூ வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கேபிஎன் நோக்கி செல்லும் வாகனங்கள்: ஓஎம்ஆர் மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து கேபிஎன் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும். எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.