திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி ரூரல் துர்காசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிஷ்குமார்(35). பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியை ஜோதிஷ்குமார், தனது வீட்டில் உள்ள டிவியில் நண்பர்களுடன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். விறுவிறுப்பான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் ஜோதிஷ்குமார் கடும் மனவேதனை அடைந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜோதிஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.