டொராண்டோ: கனடாவில் மீண்டும் விசா சேவைகளை தொடங்கும் இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தியா, கனடா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மேலும் கனடா நாட்டினருக்கான இந்தியா விசாவும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது. இதனால் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா, கனடா பிரச்னையை தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக கனடாவில் மீண்டும் விசா சேவையை தொடங்குவதாக இந்தியா நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் கருத்தரங்க விசா சேவைகள் நேற்று முதல் தொடங்கி உள்ளன. இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனடா குடிவரவுத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியதாவது, “இந்தியாவின் விசா நிறுத்தம் கனடா மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. அவர்கள் வேதனையில் இருந்த நேரத்தில் இந்திய விசா சேவை மீண்டும் துவங்கி உள்ளது நல்ல அறிகுறி” என்று தெரிவித்துள்ளார். சீக்கியரான அவசரகால தயார்நிலைகளுக்கான அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் கூறியதாவது, “இந்தியாவின் விசா சேவை மீண்டும் தொடங்கியது நல்ல செய்தி” என்று தெரிவித்துள்ளார்.