தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக பெற்றது ரூ.8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.12,700 கோடி பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வழிமுறைகளில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூல் செய்த மிகப்பெரிய மோசடி அம்பலமாகியிருக்கிறது. பி.எம்.கேர்ஸ் என்ற நிதி எதற்காக தொடங்கப்பட்டது, யாருக்காக தொடங்கப்பட்டது, இதற்கு நன்கொடை வழங்கியவர்கள் யார், இதை நிர்வகிப்பவர்கள் யார் என்பது எதுவுமே வெளியே தெரியாமல் பூடகமாக மறைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடையில் எத்தனை வகையான ரகசியம் பின்பற்றப்பட்டதோ, அதைப் போலவே பி.எம்.கேர்ஸ் நிதி திரட்டலிலும் கையாளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரதமரின் மேற்பார்வையில் நிதியை அவர் யாருக்கு வழங்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை தன்னிச்சையாக வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதுவரை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார் பணம் கொடுத்தார்கள் ? எவ்வளவு கொடுத்தார்கள் என்பதுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பி.எம்.கேர்ஸ் நிதிக்கும், அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிற அதேநேரத்தில் ஒன்றிய அரசினால் நடத்தப்படுகிற 38 பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் பி.எம்.கேர்ஸ்க்கு நிதி வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.2105 கோடி வழங்கியிருக்கிறது. இதைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்தவிதமான சட்ட ஒப்புதலுமின்றி ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் நிதி திரட்டி, தன்னிச்சையாக செலவு செய்வதை விட மிகப்பெரிய ஊழல் என்ன இருக்க முடியும்? பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி.