நியூயார்க்: அமெரிக்காவின் பால்டிமோர் கவுன்டியில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு இந்தியாவை சேர்ந்த மென்பொருள் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் தாவனகெரே மாவட்டம் ஹலேகல் கிராமத்தை சேர்ந்தவர்கள்யோகேஷ் எச்.நாகராஜப்பா(37), அவரது மனைவி பிரதீப் ஒய். அமர்நாத்(37). மென்பொருள் இன்ஜினியர்களான இவர்கள் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோர் கவுன்டி பகுதியில் 6 வயது மகன் யாஷ் ஹொன்னலுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் தங்கள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் பால்டிமோர் கவுன்டி காவல்துறையினர், 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பால்டிமோர் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “இறந்து கிடந்த 3 பேரின் உடல்களிலும் துப்பாக்கி சூடு காயங்கள் உள்ளன. முதல்கட்ட விசாரணையில் நாகராஜப்பா தன் மனைவி பிரதீபா, குழந்தை யாஷ் ஹொன்னல் இருவரையும் சுட்டு கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 3 பேரின் மர்ம உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.