மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் வீரர்கள், நிர்வாகம் பற்றி பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக இடைக்கால தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் காலியாக உள்ள தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அஜித் அகர்கர் புதிய தேர்வுக்குழு தலைவருக்கான பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் துணைப்பயிற்சியாளராக இருக்கும் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக உளளார். வரும் 1ம் தேதி கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் அகர்கர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதத்தில் பொறுப்பேற்பார் என தெரிகிறது. இவர் இந்திய அணிக்காக கடந்த 1998- 2007ம் ஆண்டு வரை 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.