சென்னை: இந்தியா கூட்டணியை பிளவுப்படுத்த பாஜக தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் இந்த அவதூறு இந்து மக்களிடையே எடுபடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து பிரதமர் மோடி மிகவும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். பிரதமர் பங்கேற்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இந்தியா கூட்டணியை பற்றியும், குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் பற்றியும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்தியா கூட்டணியை எவ்வாறேனும் பிளவுப்படுத்த வேண்டும், சிதறடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், பெரும்பான்மை இந்து சமூகத்தை தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும், அவர்களின் நம்பிக்கைகளையும் தங்களுக்கான அரசியல் மூலதனமாக பார்க்கும் கட்சி பாஜக.
இந்துக்களுக்கு சமூக நீதியை வழங்குகிற, இதர அடிப்படை உரிமைகளை பாதுகாக்கின்ற காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று அவதூறு பரப்பி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். 10 ஆண்டு காலத்தில் பாஜக அரசு இந்துக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை இந்து பெரும்பான்மை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இனிமே பாஜக அரசு பரப்புகின்ற அவதூறுகள் பெரும்பான்மை இந்து சமூகத்தினரிடையே எடுபடாது, பாஜகவின் கனவு பலிக்காது என்று குறிப்பிட்டார்.