கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் மம்தா விரைவில் இறுதி முடிவு எடுப்பார் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. 42 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியில் உரிய முக்கியத்துவம் தரப்படா விட்டால் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்ததால் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், “தொகுதி பங்கீடு குறித்து முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி விரைவில் முடிவெடுப்பார். ஆனால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மேற்குவங்க காங்கிரஸ் பிரிவு நியாயமற்ற பேரம் பேச முடியாது” என்று தெரிவித்தார்.
* விரைவில் முடிவடையும்; காங்கிரஸ்
சிலிகுரியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, “மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மேற்குவங்கம் உள்பட அனைத்து மாநில இந்தியா கூட்டணி கட்சிகளிடையே காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது விரைவில் முடிவடையும்” என்று தெரிவித்தார்.
* பஞ்சாப் தொகுதி பங்கீடு கெஜ்ரிவால் ஆலோசனை
மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மியும், காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட விரும்புகின்றன. இதுபற்றி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கட்சித்தலைவர்கள் சந்தீப் பதக், ராகவ் சதா எம்பி மற்றும் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது உள்ள 8 எம்பிக்களுக்கும் சீட் கேட்பதால் தனித்து போட்டியிடுவதா அல்லது காங்கிரஸ் கேட்கும் தொகுதியை ஒதுக்குவதா என்று ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
* உபியில் விரைவில் உடன்பாடு
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் உபியில் விரைவில் தொகுதி உடன்பாடு மேற்கொள்ளப்படும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் தெரிவித்தார். 80 தொகுதிகள் கொண்ட உபியில் ஜெயந்த் சவுத்திரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கு 7 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாக அவர் தெரிவித்தார்.