வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் வரும் 22ம் தேதி உரையாற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தொடர்பு உத்திகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியிடம், இந்தியாவில் ஜனநாயகம் ஆரோக்கியமாக உள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ‘‘இந்தியா ஒரு துடிப்புமிக்க ஜனநாயகமாக செயல்படுகிறது. டெல்லி செல்பவர்கள் இதனை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், இரு நாடுகளின் உறவு, நட்பை மேலும் வலுப்படுத்தும். பல நிலைகளில் இந்தியா அமெரிக்காவுக்கு கூட்டாளியாக உள்ளது. இந்தியா, அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என சொல்வதற்கு அமெரிக்காவிடம் நிறைய காரணங்கள் உள்ளது. நாடாளுமன்ற உரையில், இந்தியாவின் எதிர்காலம், தொலைநோக்கு பார்வை, உலகளாவிய சவால்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று அதிபர் பைடன் எதிர்பார்க்கிறார்,” என்று கூறினார்.