டெல்லி : கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காமராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருமகன், சமூக அதிகாரமளித்தலுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் சக்தியாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள் நலன் மீதான அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் அர்ப்பணிப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெரியவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. தொடக்கக் கல்வி பெறுவதே பெருங்கனவாக இருந்த காலத்தில் மதிய உணவு மூலம் ஏழை-எளிய பிள்ளைகளை பள்ளி நோக்கி வரச்செய்த காமராஜர் பிறந்த ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழறிஞர் அவர்கள் அறிவித்தார்கள். கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள். கல்வி கடைக்கோடி வரை சென்றுசேர உழைத்த காமராஜரின் பணிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.