கொழும்பு: இந்தியாவின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் மிக பெரிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இலங்கை அதிபர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசிக்க சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேசுகையில்,‘‘ தமிழர்கள் அதிகமாக உள்ள கிழக்கு மாகாணத்தை வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திரிகோணமலையை பல அடுக்கு பொருளாதார மையமாக மாற்றுவதற்கு அரசு தீவிரமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது.
திரிகோணமலை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அங்கு மின் சக்தி,போக்குவரத்து, கடல் சார் வணிகம், விமான போக்குவரத்து, தொழில்கள் மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பான திட்டங்கள் தயாராகி வருகிறது. இதற்காக சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து வருகிறது. அதன்படி வெருகலூறு முதல் பனாமா வரையிலான கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும்’’ என்றார்.