ஸ்ரீஹரிகோட்டா : பூமியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ள சந்திரயான் 3 விண்கலம், நிலவின் சுற்றுப் பாதையை நோக்கி பயணத்தைத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த 14-ம் தேதி 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து நிலவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவ சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயானை செலுத்தும் பணிகளை இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்படி, சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்து நிலவின் ஈர்ப்பு விசைக்குள் பயணிக்க தொடங்கியுள்ளது.
வரும் 5ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் பயணிக்கும். அதன் தொடர்ச்சியாக 17ம் தேதி உந்து கலனில் இருந்து லேண்டர் கலன் விடுவிக்கப்படும். அதில் இருந்து ரோவர் கலன் வெளியேறி நிலவின் தரையில் பயணித்து ஆய்வுகளை நடத்த உள்ளது. அதற்காக விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு 5வது முறையாக உயர்த்தி செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ட்ரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் விண்கலத்தை இஸ்ரோ செலுத்தியதை தொடர்ந்து, திட்டமிட்டபடி இந்த மாதம் 23ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதிக்கும்.