வாஷிங்டன்: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையே சாதகமான உறவு நீடிப்பதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியங்களில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இந்த கடல் பகுதிகளில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை மேற்கொள்ள இருநாடுகளும் உறுதிப்பூண்டுள்ளன. இந்நிலையில் இருநாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24 வரை 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.
ஜூன் 21ம் தேதி ஜோ பைடன், ஜில் பைடன் தனிப்பட்ட முறையில் அளிக்கும் குடும்ப விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து ஜூன் 22ம் தேதி காலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறும்போது, “இந்தியா அமெரிக்க இடையே பல ஆண்டுகளாக உள்ள நட்புறவு தற்போது முன்னெப்போதையும் விட ஆழமானதாக உள்ளது. உலகளாவிய பல பிரச்னைகளுக்கு இடையே பிற நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார்.