இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்திருவிழா என்று போற்றப்படும் நாடாளுமன்றத் தேர்தல்,
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ம்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் உச்சத்தை தொட்டுள்ளது. கோடை வெப்பம் ஒரு புறம் கொளுத்தும் நிலையில், கட்சிகளின் பிரசாரமும் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களே பிரதானமாக உள்ளனர். இவர்களுக்கு இடையிலான மும்முனை போட்டி தான், அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளது. மக்களோடு மக்களாக தமிழ்நாட்டு தலைவர்கள் பிரசாரம் செய்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள தேசிய தலைவர்களும், அவர்களோடு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி ஒவ்வொரு நிலையிலும், தலைவர்கள் கரம்கோர்த்து வந்தாலும், நம்பகத்தன்மை மிகுந்தவர்கள் யார்? நமக்கான நன்மைகளை செய்பவர் யார்? சொல்வதை செய்யும் ஆற்றல் அவருக்கு உள்ளதா? என்று சீர்தூக்கி பார்த்து வாய்ப்பு வழங்குவதில் வல்லவர்கள் தமிழ்மண்ணின் வாக்காளர்கள். இந்த வகையில், கொங்கு மண்டலத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், புதிய வரலாற்றுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். லட்சக்கணக்கான மக்கள் திரண்ட அரங்கில், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி ஆகியோரின் உரைவீச்சு, தேசிய அரசியலிலும் கவனத்ைத ஈர்த்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று கடந்த காலத்தில் பாஜ., கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் பொய்மூட்டைகளாய் போனதை முதல்வர் சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதி தராத ஒன்றிய அரசு, கோவைக்கு ₹6,500 கோடியில் வந்த ஆலையை தட்டிப்பறித்து, குஜராத்திற்கு கொண்டு சென்றதையும் அம்பலப்படுத்தினார்.
ராகுல்காந்தியின் பேச்சு, தமிழ்நாட்டின் சமூகநீதிக்கு வலுவூட்டியதோடு பாஜ தலைவர்களின் தமிழ்நேச முகத்திரையையும் அகற்றியது. தமிழ்நாடு மீதும், தமிழ்மக்கள் மீதும் தாக்குதல் நடத்தும் கூட்டணிகளை ஒருசேர வீழ்த்துவோம் என்று இருவரும் சூளுரைத்த போது, எழுச்சியால் திடலே ஆர்ப்பரித்தது. அந்த ஆர்ப்பரிப்பானது இது ஒப்பற்ற கொள்கை கூட்டணி என்பதை பறைசாற்றியது. இது ஒரு புறமிருக்க, இதர கூட்டணிகள் அனைத்தும் உதட்டளவில் மட்டுமே நட்பு பாராட்டும் நிலையில், உளப்பூர்வமான நிகழ்வுகளும் இந்த பிரசாரத்தில் நடந்தது.
கோவையில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற ராகுல்காந்தி, சாலையோரம் காரை நிறுத்தி இனிப்புகளை வாங்கினார். அந்த இனிப்பு பையை தானே எடுத்து சென்று, தன்னை வரவேற்ற முதல்வரிடம் வழங்கினார். அவரை முதல்வர் ஆரத்தழுவிய நிலையில் ‘எனது மூத்த சகோதாரன்’ என்று அழைத்து பேச்சை துவங்கினார். முதல்வரும், நாளைய இந்தியாவின் நம்பிக்கை ராகுல்காந்தி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பன்முகத்தன்மைக்கு ஆதாரமான சமூகநீதி, அதுசார்ந்த திட்டங்களால் வளம்பெறும் மக்களின் முன்னேற்றம் என்பதே, இந்த பிரசார கூட்டத்தின் ெபரும் நோக்கமாக இருந்தது. ஈடற்ற இந்த நோக்கம், இந்தியா கூட்டணியின் வெற்றிக்கான முதல் படியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.