வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
இந்த மக்களவை தேர்தல் இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இல்லை. ஜனநாயகமா – சர்வாதிகாரமா, மதச்சார்பின்மையா – மதவெறியா, கூட்டாட்சியா – தனிக்கட்சி சர்வாதிகாரமா இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல். எனவே பாஜவை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதிமுகவை தோற்படிப்பது மட்டுமல்லாமல், கலாநிதி வீராசாமியை வெற்றி பெறச் செய்து மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும்
நேரு, நரசிம்மராவ், வி.பி.சிங், வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் மோடியை போல் ஒரு மோசமான ஆட்சி இதுவரை நடைபெறவில்லை. காந்தியை சுட்டுக் கொன்றதற்கு பின்னால் எந்த தத்துவம் இருந்ததோ, அந்த தத்துவம்தான் தற்போது பாஜ ஆட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று மோடி கூறினார். ஆனால் கடந்த பத்தாண்டு பாஜ ஆட்சி ஊழலில் ஊறித் திளைக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் செய்த மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டதே அதற்கு சாட்சி. இந்திய சுதந்திர வரலாற்றில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத மெகா ஊழலில் பாஜ சிக்கியிருக்கிறது. சாதாரண ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கிடையாது. இவர்களின் கவலையெல்லாம் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் குறித்துதான். வடமாநிலங்களில் பாஜ வீழ்த்தப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமையக்கூடிய நல்லசூழல் உருவாகி இருக்கிறது. தேர்தல் பத்திரத்தின் மூலம் பாஜ செய்த ஊழல் விவரங்கள் வெளிவந்த பிறகு பாஜவின் தோல்வி மேலும் உறுதியாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.