சென்னை: 77-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில், சுதந்திர தினவிழா இன்று (15.08.2023) சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் க.குணசேகரன், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இப்போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகின்ற வகையில், 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் தமிழ்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள 84 மாணவ மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் தமிழ்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள 68 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 152 மாணவ மாணவிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
மேலும், இப்போக்குவரத்துக் கழகத்தில் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு அதிக அளவில் கிலோ மீட்டர் இயக்கி சாதனை புரிந்த 31 ஓட்டுநர்களுக்கும், ஜனவரி 2023 முதல் ஜுன் 2023 வரை சராசரி வசூல் தொகையைவிட அதிக வசூல் ஈட்டிய மற்றும் அதிக பயணச்சீட்டு வழங்கிய 31 நடத்துநர்களுக்கும், சிறந்த முறையில் தொழில்நுட்ப பணியினை மேற்கொண்ட 31 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், மாநகர் போக்குவரத்துக் கழக பாதுகாப்பு மற்றும் பயிற்சி பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றிய 2 பணியாளர்களுக்கும், 01.04.2022 முதல் 31.03.2023 வரை சிறப்பாக பணிபுரிந்த 3 குழுவைச் சார்ந்த 10 பரிசோதகர்களுக்கும், மண்டல தொழிற்கூடங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய FC Unit, RC Unit & Tyre plant பிரிவுகளைச் சார்ந்த 13 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், கட்டிடப் பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றிய 15 பணியாளர்களுக்கும், தலைமையகத்தில் உள்ள கணக்கு / தணிக்கை பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றிய 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர் உள்ளிட்ட 295 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தலைமை நிதி அலுவலர், முதுநிலை துணை மேலாளர் (ம.வ.மே.), பொது மேலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் / பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள், அவர்தம் பிள்ளைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.