திருவொற்றியூர்: சவுகார்பேட்டை பகுதியில் 3 நகை பட்டறைகளில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சவுகார்பேட்டை பகுதியில் அதிகளவு நகைப் பட்டறைகள், நகை கடைகள் உள்ளன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் நகை செய்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து தினசரி ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம்.
இங்குள்ள நகைப் பட்டறைகள், நகைக் கடைகளில் இருந்து உரிய முறையில் வருமான வரி செலுத்துவதில்லை என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் சவுகார்பேட்டை, எடப்பாளையம் தெருவில் மோல்டிங் குமார் என்பவருக்குச் சொந்தமான தங்க நகைப் பட்டறையில் நேற்று மதியம் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் அங்குள்ள 3 நகை பட்டறைகளில் சோதனை நடந்தது. அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.